Thursday, March 18, 2010

சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள்

.

''ஏனைய பலரையும் போல அவரும் சாவதற்காக இடுகாட்டுக்குப் போய்விட்டார் என்றா நினைக்கிறாய் ? சறுக்கூர்தியில் நாம் அவர் உடலை இழுத்துச் செல்ல வேண்டி வருமென தாமே புறப்பட்டு அங்கே சென்றுவிட்டார் என்கின்றாய் ? ..இல்லை, அம்மா,அதெல்லாம் இல்லை ! ''
''அதைப் பற்றிப் பேச வேண்டாம் .''
''திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றிருக்கிறார் ...எனக்கு வெதுவெதுப்பாக இருக்கட்டுமென்று மேல் கோட்டை என் மேல் போர்த்துவிட்டுச் சென்றார்.
மெய்யாகவே நீ அப்படியா நினைக்கிறாய் ? ...இல்லை ,அம்மா,என்னை அவர் ஏமாற்ற மாட்டார் ! ''
''ஏமாற்ற மாட்டார் ,நீ பயப்படாதே .....அவருக்காக நாம் காத்திருப்போம் .நாம் உயிருடன் இருந்தாக வேண்டும் ,தெம்பு இழக்கக் கூடாது .நாம் சாகாமல் இருந்தாக வேண்டும் .அல்யோஷா,நாம் உயிரோடு இருக்கவேண்டுமென்று எத்தனையோ பேர் உயிரை விட்டிருக்கிறார்கள் ....உயிரோடு இருந்து பகைவனை முறியடித்தாக வேண்டும் .இது நமது கடமை .''

மாஸ்கோ ,முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ''சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள் '' என்ற வீரச் சிறுவர்கள் கதைகள் அடங்கிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது மேற்கண்ட வரிகள் -பக்கம் 102.
இந்தப்புத்தகம் தான் என்வாழ்வில் நான்வாங்கிய முதல் புத்தகம்(காசு போட்டு) .பசுமையான அந்த நிகழ்வு என்னால் மறக்கமுடியாதது .மதுரை மாவட்டம் (இப்பொழுது தேனி மாவட்டம்) வத்திலக்குண்டிற்கும் பெரியகுளத்திற்கும் இடையில் அமைந்துள்ள தேவதானப்பட்டியில் இருக்கும் அரசினர் மேனிலைப்பள்ளியில் அப்பொழுது நான் 8 வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றேன் 1980ல்.எங்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்திருந்த புத்தகக்கண்காட்சியில் மலர்ந்திருந்து என்னை இந்த புத்தகம் வரவேற்றது .4 ருபாய் 50 பைசா புத்தகம் 4 ருபாய் .கையில 2 ருபாய் தான் இருந்துச்சு ,புத்தகத்தை விட்டுவர மனசில்லை .அப்ப எங்கண்ணன் அதே ஸ்கூலில் தான் +1 படிச்சிட்டு இருந்திச்சு .2 ருபா வீட்டுக்கு வந்து தரேனு செல்லி கடன் வாங்கி வாங்கினேன் .ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதிலிருந்த கதைகள் ,படங்கள் அப்பப்பா.

எங்கம்மாய் வீடு கோவை மாவட்டம் (இப்பொழுது ஈரொடு மாவட்டம்) ஈரொடு டூ மேட்டூர் ரோட்டில் உள்ள அம்மாபோட்டையிலிருந்து அந்தியூருக்கு செல்லும் வழியில் ,5வது கிலோமீட்டரில் உள்ள ஊஞ்சப்பாளையத்திலிருக்கும் மேற்காலத்தோட்டம் .அங்கு கோடை முழுவதும் நாங்க , எங்க பெரியம்மா மற்றும் சித்தி வீட்ல இருத்து எல்லோரும் வருடாவருடம் டெண்டு அடிப்பது வழக்கம்.எங்கப்பா தேவதானப்பட்டியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மஞ்சளார் அணையில் வேலைபார்த்துவந்தார் .அங்கு தான் நாங்க ,நான் 10 வருப்பு படிக்கும் வரை குடியிருந்து வந்தோம் .வருசாவருசம் எங்க அப்பிச்சி பழனிக்கு வந்த முருகனுக்கு மொட்டையடுச்சுட்டு மஞ்சளார் டேம் வந்து எங்களை லீவிற்கு மேற்காலத்தோட்டத்துக்கு கூட்டீட்டுப் போகும்.அங்கு நாங்கள் ஆட்டம் பாட்டத்தினுடே இரவு உறக்கத்திற்கு முன் பல மணிநேரம் எங்க அப்பிச்சி ,மாமாக்களுடன் நாங்க படிச்சதை விவாதிப்போம் .அதோடு புதுப்புத்தகம் வாங்கிட்டுப்போய் .அங்கு படித்து பகிர்ந்துகொள்வோம்.இந்தப்புத்தகம் வாங்கிய வருடம் எங்க அப்பிச்சியின் வரவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்த கணங்கள் அப்பப்பா.

பதின்ம நினைவுகள் பற்றி தொடர் பதிவிட நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அழைத்த பொழுது நான் முதலில் வாங்கிய இந்த புத்தகம் தான் ஞாபகத்திற்கு வந்தது .30 ஆண்டுகள் தாண்டிவிட்டதை அதைப்பார்த்த பிறகு தான் தெரிந்துகொண்டேன் .அதைப்பார்த்ததும் மீண்டும் ஒரு முறை படிப்பதேன்.எனக்கு பல விசயங்களை அது மீண்டும் புதிதாக கூறியது .இப்போதைய...சுழலில் அதில் உள்ள சில வரிகள் என்னை ஏதோ பிரண்டியது ...அப்படிப்பிரண்டியதில் தலையான வரி தான் மேலே உள்ள வரிகள் .
இது போன்று நாம்... நாம்... நமக்காக ...நமது மொழியில் ...எழுத வேண்டாமா ? ... என்று ?...என்று ?...
என்ற ஏக்கத்தினையும் விதைத்தது இது .


பதின்மப் பதிவு தொடரும் ...

தொடர் பதிவிட அழைத்த நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு மிக்க நன்றி .


.



.


.